Wednesday, February 15, 2023

முன்னறிவிப்புகள்

🪴 முன்னறிவிப்புகள் 🪴

தொடர்-1

இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட வாழ்கை நெறியாகும்..

முஸ்லிம்கள் தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.

இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.

எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர்.
அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள் – இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று நிரூபிக்க முடியவில்லை.

இன்ஷாஅல்லாஹ்

தொடரும்.. 

No comments:

Post a Comment